செவ்வாய், 11 ஜனவரி, 2011

தங்கத்தின் உண்மை விலை என்ன???

கடந்த சில வாரங்களாகப் பங்குச் சந்தையின் முக்கிய தலைப்புச் செய்தியாக வருவது தங்கத்தின் விலை வணிகம் காரணமாக உயர்ந்து கொண்டே செல்வதுதான். உலக நாடுகளில் இந்தியாவில்தான் தங்கத்தை மிக அதிகமான அளவு ஆபரணத்திற்காகப் பயன்படுத்துகின்றோம். குறிப்பாகத் திருமணத்திற்கும் மற்றும் பல நல்லகாரியங்களுக்கும் தங்க அணிகலன்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வசதி குறைவானவர்களும் தங்கத்தைக் கட்டாயம் திருமணச் சடங்குக்காக வாங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இது தவிர வணிகத்தில் மற்ற பங்குகளின் விலை சரியும் போது பாதுகாப்பிற் காகவும், பங்குகளில் வந்த இலாபத்தினையும் தங்கத்தில் முதலீடு செய்யும் வணிகர்கள், உலகப் பங்குச் சந்தையில் ஏராளமானோர் உள்ளனர். இவ்வாறாகத் தங்கத்தின் தேவையை இரண்டு வகைப்படுத்தலாம்.

1.ஆபரணத்திற்கான தேவை (Physical demand for Gold )

2. முதலீட்டிற்கான தேவை ( Investment demand for Gold )

ஆனால் இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால், ஆபரணத் தங்கத்திற்கான விற்கும் விலை வணிகத்தின் மூலமே நிர்ணயம் செய்யப்படுகின்றது. உதாரணத்திற்கு, சில சமயம் 5 நாட்களில், 10 விழுக்காடு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது எனப் பத்திரிகைகளில் செய்தி படிக்கின்றோம். நகைக் கடைக்குச் சென்றால், 10 விழுக்காடு அதிக விலை கொடுத்தே வாங்க வேண்டும். சமூகத்தில் 5 நாட்களில் என்ன மாறியிருக்கக் கூடும்? வருமானம் 5 விழுக்காடு உயர்ந்திருக்குமா? பண வீக்கம் உயர்ந்திருக்குமா? நாட்டில் யுத்தம் நடை பெற்றிருக்குமா? அப்படி எதுவுமே நடந்திருக்காது.

உலகப் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கத்தைப் பங்குகளாக வாங்கிக் குவித்திருப்பர். பொதுவாக மார்கழி மற்றும் தை மாதங்களில் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கும். காரணம் தை மாதத்தில் திருமணங்கள் அதிகம் நடைபெறும். அதனால் தங்க ஆபரணங் களுக்கான தேவை அதிகரிக்கும். இது தங்க நகை வியாபாரிகளின் நன்மைக்கே! இன்றைய நிலையில் தங்கத்தின் தரமான விலை இந்திய ரூபாய் மதிப்பில் என்னவாக இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து பார்க்கலாம். கீழ்கண்ட வரைபடத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கான இந்திய ரூபாயின் பணவீக்க உயர்வும், தங்கத்தின் விலை மதிப்பும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 2005 இல் இருந்து தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதைக் காணலாம். இது முற்றிலும் உலகப் பங்குச்சந்தை வணிகத்தின் மூலமாகவே உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 2005 முதல் நவம்பர் 2010 வரை, இந்திய ரூபாயின் பணவீக்கம் 60.77 விழுக்காடு ஆகும். இதே காலகட்டத்தில் தங்கத்தின் விலை 232.76 விழுக்காடு உயர்ந்துள்ளது.

ஜனவரி 2005 இல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 595.98. நவம்பர் 2010 இல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 1983.20. பணவீக்க உயர்வின் விழுக்காட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தங்கத்தின் விலை இன்றைய நிலையில் கிராம் ஒன்றிற்கு 958.16 ரூபாயாகத்தான் இருக்க வேண்டும். ஏற்பட வேண்டிய குறைந்த பட்ச விலை திருத்தம் 30 விழுக்காடு ஆகும். இனி தங்கத்தின் விலை குறையத் தொடங்கி தரமான விலையை நோக்கி வணிகத்தில் நகரும். எனவே குறைந்தது தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு ரூபாய் 1388.24 க்கு வரவேண்டும்.

நன்றி செய்திகள் : கதிர் கலிபோர்னியாவில் இருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக